விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்தின் சமீபத்திய ஐடியா காரணமாக, முன்னணி நடிகர்கள் சிலர் பீதியில் உள்ளனர். அப்படி அவர் என்ன சொன்னார்?
ஒரு படம் வெளியான மறுநாளே, இமாலய வெற்றி என்று விளம்பரம் தருகிறார்கள். அது எந்தப் படமாக இருந்தாலும். படத்தில் நடித்த நடிகர்களும், நாம நடிச்ச படம் ஹிட்டாயிடுச்சி போல என்று நினைத்து அடுத்தப் படத்துக்கு அதிக சம்பளம் கேட்க ஆரம்பிப்பார். படம் தோல்வி அடைந்தாலும் ஏற்றி சம்பளத்தை நடிகர்கள் குறைப்பது இல்லை.
இதற்கு முடிவுகட்ட, படங்களின் வசூல் விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவது என்ற யோசனையை திருப்பூர் சுப்பிரமணியம் முன் வைக்க, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தாணு உள்பட அனைவரும் உடனே ஒப்புக் கொண்டனர். ஒரு படத்தின் நியாயமான வசூலை வெளியிடும் போதுதான் ஒரு நடிகரின் உண்மையான சந்தை மதிப்பு தெரிய வரும், அப்போதுதான் நம்ம லெவல் என்ன... நாம கேட்கிற சம்பளம் வொர்த்தா என்பது சம்பந்தப்பட்ட நடிகருக்கே தெரிய வரும்.
தயாரிப்பாளர்கள் இந்த வெள்ளை அறிக்கை விவகாரத்தை உடனே செயல்படுத்தும் முடிவில் உள்ளனர். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட போவதில்லை. அதேநேரம் விஷால் போன்றவர்கள் ஒரு படத்துக்கு எட்டு கோடிகள்வரை கேட்கிறார்கள். இவர்களின் படங்கள் மிகக்குறைவாகவே வசூலிக்கின்றன. எட்டு கோடி சம்பளம் என்பது விஷால் போன்றவர்களுக்கு மிக அதிகம். இந்த இரண்டாம்கட்ட ஹீரோக்களை கட்டம்கட்ட இந்த வெள்ளை அறிக்கை முடிவு பெரிதும் உதவும் என தயாரிப்பாளர்கள் எண்ணுகிறார்கள்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் கணினிமயமாக்க முடிவு செய்துள்ளனர். அப்படி கணினிமயமாக்கப்பட்டால் திரையரங்கில் எத்தனை பார்வையாளர்கள் படம் பார்க்கிறார்கள் என்பது தயாரிப்பாளருக்கு தெரிந்துவிடும். இந்த திட்டங்கள் எல்லாமே படத்தின் வசூலை துல்லியமாக அறியும் முயற்சிகள்தான்.
டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும், வசூலை அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் பல ஆண்டுகளாக நாம் சொல்லி வருவதைத்தான் இப்போது தயாரிப்பாளர்கள் முன்வந்திருக்கிறார்கள். இந்த முயற்சியிலிருந்து அவர்கள் பின்வாங்காமல் இருக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை.
(கொசுறு... நடிகைகளை கட்டம் கட்டவும், அவர்களின் சம்பளத்தை குறைக்கவும் ஒரு திட்டம் தீட்டப்பட்டால் தமிழ் சினிமா சுபிட்சமடையும்).