கோவிலுக்கு வந்த பெண்ணை, ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் ஜவஹர் பஜாரில் வசித்து வருபவர் நிர்மலா (வயது 45). இவரது கணவர் கண்ணன், அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகின்றார்.
கரூர் அடுத்த பசுபதிபாளையம் பகுதியை சார்ந்த ஆறுமுகம், நிர்மலாவின் உறவினர் ஆவார். இவர் கரூர் பேருந்து நிலையம் பகுதியில் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்து வருகின்றார்.
இந்நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள காமாட்சியம்மன் கோயிலுக்கு நிர்மலா, சாமி கும்பிட கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது வெள்ளரி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆறுமுகம் கோயிலுக்குள் புகுந்து நிர்மலாவை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது தடுத்த நிர்மலாவிற்கு வலது கையிலும் தோள்பட்டையிலும் வெட்டு விழுந்தது. இதில், அவர் மயங்கி ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் ஆறுமுகத்தைப் பிடித்து சரமாரியாக தாக்கி, கரூர் நகர போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். அரிவாளால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிர்மலா கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் கரூர் நகர காவல்துறையினர் ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பட்டப்பகலில் அதுவும் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணை கோயிலில் வைத்தே கொலை செய்ய முயற்சித்த சம்பவம் போலீஸாரிடம், பொதுமக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.