Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனி பலமா ? பலவீனமா ? – முடிவெடுக்கும் நேரம்…

தோனி பலமா ? பலவீனமா ? – முடிவெடுக்கும் நேரம்…
, செவ்வாய், 15 ஜனவரி 2019 (08:13 IST)
கடந்த ஓராண்டாக சரியான ஃபார்மில் இல்லாமல் இருந்து வரும் தோனியால் அணியின் பேட்டிங் பலவீனமடைந்துள்ளது.

தோனி இறங்கினாலே மேட்ச்சை வெற்றிகரமாக முடித்துவிட்டுதான் திரும்புவார் என்று இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தக் காலம் ஒன்று உண்டு. ஆனால் இப்போதெல்லாம் தோனி இறங்கினாலே ஒன்று உடனடியாக அவுட் அல்லது ஆமை வேக ஆட்டத்தில் பந்துகளை வீணாக்குவது என மாறிவிட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தோனி அடித்த அரைசதம்தான் கடந்த 13 மாதங்களில் அவர் அடித்த முதல் அரைசதம். அதுவும் ஆமைவேகத்தில் 96 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். டெஸ்ட் போட்டிகளில் கூட தோனி இந்தளவு மந்தமாக விளையாடியதில்லை. அந்தப் போட்டியின் தோல்விக்கு தோனி வீணடித்த 45 பந்துகளும் ஒரு முக்கியக் காரணமாகும்.

தோனிக்கு இப்போது 37 வயதாகிறது. அதனால் பழைய அதிரடியை இப்போது எதிர்பார்க்கக் கூடாதுதான். ஆனாலும் அணிக்கு ரன்கள் தேவைப்படும்போது இப்படி மந்தமாக விளையாடுவது ஒருநாளும் ஏற்புடையதல்ல. உலகக்கோப்பைப் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில் தோனியின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய பேட்டிங் பலத்தைக் குறைப்பதாக அமைந்துள்ளன. இது போன்றே தோனியின் செயல்பாடுகள் தொடர்ந்தால் அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடக் காத்திருக்கும் ரிஷப் பாண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம். பிசிசிஐ யும் உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடும் அணியில் ரிஷப் பாண்ட் பெயர் பரிசீலிக்கப்படுவதாக கூறியுள்ளது.

தோனி தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாகப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறார். ஒரு காலத்தில் அணியின் பின்வரிசை பேட்டிங்கை தூணாக நின்று தாங்கிய தோனி இன்று அணிக்குப் பலவீனமாக இருக்கிறார். இதிலிருந்து மீண்டு மீண்டும் பழைய தோனியாக வரவேண்டும் என்பதே 100 கோடி இந்திய ரசிகர்களின் ஆசை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 ரன்களுக்கு ஆல் அவுட்: மோசமான உலக சாதனை