Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது ராமர் கோவில் திறப்பு விழா அல்ல.. தேர்தலுக்காக செய்யும் அரசியல் விழா! – விசிக திருமாவளவன் விமர்சனம்!

இது ராமர் கோவில் திறப்பு விழா அல்ல.. தேர்தலுக்காக செய்யும் அரசியல் விழா! – விசிக திருமாவளவன் விமர்சனம்!

Prasanth Karthick

, திங்கள், 22 ஜனவரி 2024 (08:31 IST)
இன்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் நிலையில் இது முழுக்க அரசியல் தலையீடு கொண்ட ஒரு விழா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


 
அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படுகிறது. இந்த கோவில் பிரதிஷ்டை சனாதன முறையை மீறி நடப்பதாக கூறி சங்கராச்சாரியார்கள் உள்ளிட்ட சில இந்து மதகுருக்கள் இதில் கலந்து கொள்ள மறுத்துள்ளனர். அதுபோல ஆன்மீகம் என்ற பெயரில் அரசியல் செய்வதாக எதிர்கட்சிகளும் இந்த திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன.

இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழா குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன் “ஐந்து வயது குழந்தை இராமருக்கு அயோத்தியில் மாபெரும் கோவில். நாடெங்கிலும் இராமர் படம் பொறித்த காவிக் கொடிகள் பெருமிதம் குலுங்க பறக்கின்றன. கொண்டாடிக் கூத்தாடும் வெற்றிக் களிப்பில் சங் பரிவார்கள். பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இசுலாமியர்கள். 1949 இலிருந்து தொடர்ந்து பரப்பப்பட்ட இசுலாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலின் விளைச்சலாக- வெற்றி விழாவாக சனவரி 22 இல் அயோத்தியில் இராமர் விழா அரங்கேறுகிறது. 'இராமர் பிறந்த இடம் இதுதான்' என்று நானூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பாபர் மசூதி 1992 இல் அடியோடு பெயர்த்துத் தகர்க்கப்பட்டது. இசுலாமிய இந்தியர்கள் சிந்திய செங்குருதியில் மத அடிப்படையிலான ஆதிக்கப் பெரும்பான்மைவாதம் நிலைநாட்டப்பட்டது.

 
'இராமருக்கே வெற்றி' என்னும் 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கத்தையே ஆயுதமாக உயர்த்திப்பிடித்து இன்று அங்கே இராமர் திருக்கோவில் நிறுவப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கற்பாறையிலிருந்து எடுக்கப்பட்ட கருப்புக் கல்லில் செதுக்கி வடிக்கப்பெற்ற ஐந்து வயது குழந்தை இராமர் சிலை அக்கோவிலின் கருவறையில் ஏற்கனவே நிறுவப்பட்டு, அதற்கு உயிரூட்டும் நிகழ்வுதான் சனவரி 22 அன்று நடைபெறுகிறது. அந்த சடங்குதான் சமற்கிருதத்தில் 'பிராண பிரதிஷ்டை' என அழைக்கப்படுகிறது. அக்னி குண்டங்களில் நெய் வார்த்து, பெரும் தீ வளர்த்து, சமற்கிருத மொழியிலான வேதங்களை ஓதும் யாகங்கள் என்னும் வேள்விகளின் மூலம், கற்சிலையாகவுள்ள மழலை இராமருக்கு, பிரபஞ்சத்திலிருந்து 'தெய்வீக ஆற்றலை' ஈர்த்தளிப்பது தான் 'பிராண பிரதிஷ்டை' என்னும் அந்த உயிரூட்டும் சடங்காகும். இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள், தனது கைகளால் தொட்டு பால இராமரின் கற்சிலைக்கு உயிரூட்டப் போகிறார்.

அதற்கு வட இந்திய சங்கராச்சாரிகளுள் ஒருவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "சூத்திரரான மோடி இராமர் சிலைக்கு எப்படி பிராண பிரதிஷ்டை செய்யமுடியும்? அது நாட்டுக்கே பெருங்கேடு விளையும் !" - என்றெல்லாம் ஆரூடம் கூறியிருக்கிறார். இது தானே சனாதனம். பிரதமரே ஆனாலும் சூத்திரனாகப் பிறந்த மோடி தனது குல தருமத்தை மீறுவது கூடாது. அதாவது, பிராமணரல்லாத எவருக்கும் கடவுளைப் பிதிஷ்டை செய்யும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது தான் சனாதனம். மோடியும் அமித்ஷாவும் இந்துத்துவ செயல்திட்டத்திற்கு ஊழியம் செய்யும் சங்கிகளாக இருந்துகொண்டே சனாதன மரபுகளை மீறுவது, கட்சிக்குள்ளேயே பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கலாம்.

webdunia

 
இதில் பெருமை கொள்வதற்கு ஏதுமில்லை. ஏனென்றால், மோடி, அமித்ஷா போன்றவர்கள் சனாதனத்தின் அடிப்படையை எதிர்க்கவில்லை. அதாவது, இது பிராமணர்- பிராமணரல்லாதார் ஆகியோருக்கிடையிலான கருத்தியல் முரண் அல்ல; மாறாக அதிகாரம் தொடர்பான நபர் முரணேயாகும். இதனால் பார்ப்பனீயம் பலவீனமடையாது. மாறாக, இவர்களே பார்ப்பனீயம் என்னும் சனாதனத்தின் பாதுகாவலர்களாக மாறி தொண்டு செய்கிறார்கள் என்பதே உண்மையாகும். மோடியின் இந்த மரபு மீறலை பெரும்பான்மையான சனாதன சக்திகள் - குறிப்பாக, பார்ப்பனர்கள் அனுமதிப்பதும், அமைதி காப்பதும் பிராமணரல்லாத பிற அப்பாவி இந்துக்களை ஏய்க்கும் ஒரு மோசடி அரசியல் உத்தியே ஆகும்.

பிரதமர் மோடி அவர்கள் இதற்காக பதினொரு நாட்களுக்கு விரதமிருந்து வருகிறார். தென்னிந்திய மாநிலங்களில் கோவில் கோவிலாகச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டில் இரண்டு நாள்களாக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு திருவரங்கம், இராமேசுவரம், தனுஷ்கோடி கோவில்களுக்குச் சென்று இராமரை வழிபட்டு வருகிறார். இராமேசுவரத்திலிருந்து நேரடியாக அயோத்திக்குச் சென்று பிராண பிரதிஷ்டையில் பங்கேற்கிறார். உத்தரபிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் சனவரி 22 அன்று யாராவது இந்துக்கள் இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

சனாதனம் இந்துக்களின் சுதந்திரத்தை எவ்வாறெல்லாம் பறிக்கிறது என்பதை இதன்மூலம் அறியலாம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சனவரி 22 அன்று ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனைக்கும் அரைநாள் விடுமுறை. எல்லாம் இராமர்மயமாகி வருகிறது. ஆனால், அடிப்படையில் எல்லாம் தேர்தல்மயமாகி வருகிறது என்பது தான் உண்மை! அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. ஏனெனில் இன்னும் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அரைகுறை நிலையில் அவசரம் அவசரமாக இந்த விழா நடத்தப்படுகிறது. இது ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா! இந்துக்களின் நம்பிக்கைக்கான பெருவிழா என்னும் பெயரில் நடத்தப்படும் சங்-பரிவார்களின் மதவெறி கொண்டாட்டத்தின் திருவிழா! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா!

 
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர சங்பரிவார்கள் கையாளும் இந்த அரசியல் உத்தியை, அப்பாவி இந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ஏழை எளிய இந்துக்களை மேம்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் எதையும் செய்ய முனைப்புக் காட்டாத பாசிச பாஜக கும்பல், இந்துப் பெரும்பான்மைவாதம், இசுலாமிய- கிறித்தவ வெறுப்பு, ஜெய் ஸ்ரீராம் என மதத்தின் பெயரால், இந்திய மக்களை இந்துக்கள் என்றும் இந்து அல்லாதவரகள் என்றும் பிளவுபடுத்துகிற மக்கள்விரோத அரசியலையே 'இந்துத்துவா' என்னும் பெயரில் நடத்தி வருகின்றனர். அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் ஒரு சிலரின் வளர்ச்சிக்கும் அவர்களின் பாதுகாப்புக்குமே ஆட்சி நடத்தியுள்ளனர்.

அப்பாவி ஏழை எளிய உழைக்கும் இந்து மக்களை ஏய்க்கும் அப்பட்டமான 'இந்து விரோத' ஆட்சியே மோடி ஆட்சி என்பதை இன்று யாவரும் உணரத் தொடங்கியுள்ளனர். இராமரின் பெயரால் நடக்கும் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம் தான் அயோத்தியில் அரங்கேறும் தேர்தல் பிரச்சார விழா. இதனை அனைத்துத் தரப்பு இந்துப் பெருங்குடி மக்கள் யாவரும் உணர்ந்து, சங்- பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அணிதிரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்றுடன் முடிந்தது சென்னை புத்தக கண்காட்சி: புத்தக விற்பனை எத்தனை கோடி?