Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெட்கக்கேடான முயற்சியே இது.. தேர்தலில் பதிலடி கிடைக்கும்: பாஜக குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ்..!

MANO THANGARAJ

Siva

, புதன், 20 மார்ச் 2024 (07:13 IST)
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே என்ற ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன் குண்டு வெடித்த நிலையில் இது குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா என்பவர் தமிழகத்திலிருந்து பெங்களூர் வந்து தமிழர்கள் குண்டு வைத்துவிட்டு செல்கிறார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்

அவரது இந்த பேச்சுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அல்லது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது:

தமிழ் நாட்டு மக்கள் கர்நாடகத்திற்கு வந்து குண்டு வைக்கிறார்கள் என்று ஒன்றிய பாஜக அமைச்சர் ஷோபா பேசியிருப்பது தென் மாநிலங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ள வெறுப்புப் பேச்சு.

பிரதமர் மோடி அவர்கள் தமிழ் கற்றுக் கொள்கிறேன், தமிழை நேசிக்கிறேன் என்று போடும் நாடகத்தின் பின் ஒளிந்திருப்பது பாஜகவின் இப்படிபட்ட தமிழர்கள் மீதான வெறுப்பு தான். அவர்கள் ஒருப்போதும் தமிழர்கள் மீது  மரியாதை கொண்டதே இல்லை.

இங்கே தமிழர்களுக்கு நண்பர்களாக வேடம்  போட்டுவிட்டு, வெளியே தொடர்ந்து தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதிலேயே மும்மரமாக இருக்கிறார்கள். மேலும் ஒற்றுமையாக இருக்கும் தென் மாநிலங்களுக்கிடையே பிளவு ஏற்படுத்தி தேர்தலில் ஆதாயம் தேடும் திட்டமிட்ட  வெட்கக்கேடான முயற்சியே இது. இந்த வெறுப்பு பிரச்சாரத்திற்கு கண்டிப்பாக எங்கள் கர்நாடக சகோதர சகோதரிகள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை.. முக்கிய அம்சங்கள் இடம்பெறுமா?