Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'நான் கனடா வந்ததற்கு வருந்துகிறேன்' - இந்திய மாணவர்களை கவலையுறச் செய்யும் பதற்றம்

'நான் கனடா வந்ததற்கு வருந்துகிறேன்' - இந்திய மாணவர்களை கவலையுறச் செய்யும் பதற்றம்
, சனி, 30 செப்டம்பர் 2023 (21:05 IST)
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பதற்றம் இன்னும் தணியவில்லை. இதனால், கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
 
இரு அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
பல மாணவர்கள் கனடாவுக்கு வந்ததற்காக வருந்துகிறார்கள். கனடாவுக்கு ஏன் வந்தோம் என நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
 
மறுபுறம், கனடா குடிமக்களுக்கான விசா சேவையை இந்திய அரசு நிறுத்தியுள்ளது.
 
கனடா நாடாளுமன்றத்தில் கனடாவின் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்திய உளவு அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து முழு சர்ச்சையும் தொடங்கியது.
 
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இறந்த பிறகு இந்த சர்ச்சை தொடங்கியது. அவர் காலிஸ்தானின் ஆதரவாளராக இருந்தார். சர்ரே டவுனில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
கனடாவின் பிராம்ப்டன் மற்றும் மிசிசாகாவில் ஏராளமான இந்திய மாணவர்கள் வசிக்கின்றனர். கிச்சனர், வாட்டர்லூ மற்றும் கிரேட்டர் டொரண்டோவில் பல இந்தியர்கள் வசிக்கின்றனர்.
 
கனடாவில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 40 சதவீதம். இந்த மாணவர்கள் சராசரியாக 1 முதல் 2 ஆண்டுகள் வரையிலான பல்வேறு படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
 
பிராம்ப்டன், மிசிசாகா, கிச்சனர் மற்றும் வாட்டர்லூவில் உள்ள பல மாணவர்களிடம் பிபிசி பேசியது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் தற்போதைய சூழ்நிலையை நினைத்து கவலையில் உள்ளனர்.
 
ஒருபுறம் கனடாவில் படிப்பதற்கு போட்டி அதிகரித்துள்ள நிலையில், மறுபுறம் வாய்ப்புகள் குறைந்தும் வருகிறது. மேலும், இந்த அரசியல் நெருக்கடியால் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.
 
ஹர்னீத் கவுர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாட்டர்லூவில் உள்ள கோனெஸ்டோகா பல்கலைக்கழகத்தில் குளோபல் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார்.
 
கனடாவில் கல்வி கற்கச் சென்ற பல மாணவர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நாம் பேச முயன்ற ஒரு மாணவர், பேசுவதற்குத் தயாராக இல்லை. ஏனென்றால், தான் பேசும் வார்த்தைகள் தனது விசாவை ரத்து செய்ய வழிவகுக்கும் என்று அவர் பயந்தார்.
 
ஹர்னீத் கவுர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாட்டர்லூவில் உள்ள கோனெஸ்டோகா பல்கலைக்கழகத்தில் குளோபல் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். பிபிசியிடம் அவர் பேசும்போது, ​​தற்போதைய பிரச்னை குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
 
25 வயதான ஹர்னீத் கவுர் பிபிசியிடம் பேசுகையில், "நான் இந்தியாவில் இருந்தபோது நான் நினைத்ததைவிட இங்குள்ள சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டது. விநியோகத்தைவிட இங்கு தேவை மிகவும் குறைவாக உள்ளது.
 
கனடா அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், அப்போதுதான் அனைவருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்," என்றார்.
 
பொதுவாக சர்வதேச மாணவர்கள் வாரத்தில் 20 மணிநேரம் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா காலத்தின்போது, ​​​​கனடா அரசாங்கம் இந்த நேரத்தை 40 மணிநேரமாக உயர்த்தியது. இருப்பினும், சில மாணவர்கள் இதைவிட அதிகமாகச் செய்கிறார்கள்.
 
சமீபத்தில், ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரும் (Indian High Commissioner) பகுதி நேர வேலையைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிரமங்களைக் குறிப்பிட்டார்.
 
ஹர்னீத் கவுர் பஞ்சாபில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இப்போது கனடாவில் அவர் ஒரு உணவகத்தில் வேலை செய்கிறார், அவருடைய வருமானம் குறைந்தபட்ச ஊதியத்தைவிடக் குறைவாக உள்ளது.
 
பெரும்பாலான இந்திய மாணவர்கள் பகுதி நேர வேலையில் தங்கள் முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
கனடாவின் குடிமக்களுக்கான விசா சேவைகளை இந்தியா ரத்து செய்வது கனடாவில் வசிக்கும் இந்தியர்களை மோசமாகப் பாதிக்கும் என்றும் சில மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
"இது மிகவும் சிக்கலான சூழ்நிலை" என்கிறார் பிராம்ப்டனில் உள்ள ஷெரிடன் கல்லூரி மாணவர் மெஹ்தாப் கரேவால். "பயணத் தடை விதிக்கப்பட்டால், அது பஞ்சாபில் உள்ள இந்திய-கனடியர்களையே அதிகம் பாதிக்கிறது, எந்த தூதர்களையும் அல்ல," என்கிறார் அவர்.
 
மேற்கு டொராண்டோவில் சுமார் 150 பஞ்சாபி குடும்பங்கள் வாழ்கின்றன. "இந்தப் பிரச்னைய்ல் எனது உறவினர்கள் மற்றும் பல சமூகங்கள் கவலையடைந்துள்ளனர்," என்று மெஹ்தாப் கூறுகிறார்.
 
கனடாவில் உள்ள அவரது உறவினர்கள் இந்தியா வர டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். டிசம்பரில் அவர்கள் திருமணத்திற்கு வரவிருந்தனர். ஆனால், இப்போது அவரது விசா அனுமதி குறித்து பிராம்ப்டனில் உள்ள விசா அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை.
 
மலிவு விலையில் வீடு கிடைக்காததால் மெஹ்தாப் தனது உறவினர்களுடன் வசித்து வருகிறார்.
 
கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கு மலிவு விலையில் வீடு கிடைப்பது கடினமாகிவிட்டது. இந்திய தூதரகம் (Indian High Commission) வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளிலும் விலையுயர்ந்த வீடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
பெரும்பாலும் மாணவர்கள் மோசமான சூழ்நிலையில் வாழ வேண்டியுள்ளது. மற்றோர் இளம் மாணவர் பர்மிஷ் சிங், பஞ்சாபில் உள்ள மான்சாவில் இருந்து கனடா வந்துள்ளார். மிசிசாகாவில் உள்ள ஷெரிடன் கல்லூரியில் வணிகவியல் படித்து வருகிறார்.
 
19 வயதான பர்மிஷ் பிபிசியிடம் பேசுகையில், "புதிய மாணவர்களை வீட்டு உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாங்கள் புதியவர்கள், அதனால் எங்களுக்குப் பல விஷயங்கள் தெரியாது. நான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன்.
 
இது மிகவும் நெரிசலானது. இதில் சமையலறை அல்லது வேறு அறை இல்லை. ஒரு குளியலறை மட்டுமே உள்ளது. நாங்கள் ஆறு பேர் இதைப் பயன்படுத்துகிறோம். என்னுடன் ஆப்பிரிக்கா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் உள்ளனர்," என்றார்.
 
கனடா வந்த ஜெய் வர்மாவுக்கு உடனே வேலை கிடைத்தது. ஆனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பதற்றம் குறித்து அவர் கவலைப்படுகிறார்.
 
அவர் பேசுகையில், "எல்லா மாணவர்களும் தங்கள் பெற்றோரை பட்டமளிப்பு விழாவிற்கு அழைக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்திய விசாக்கள் நிறுத்தப்பட்டால், பல மாணவர்கள் சிக்கித் தவிப்பார்கள்.
 
பட்டமளிப்பு விழாவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளனர். இன்னும் எங்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை," என்றார் அவர்.
 
 
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விரைவில் சீராகும் என தெற்காசிய அமைப்பின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷாஜியா நசீர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
மாணவர்கள் நெரிசலான வீடுகளில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஜெய் வர்மா வருத்தம் தெரிவித்தார்.
 
அவர் பேசுகையில், "இங்கு புலம்பெயர்ந்த மாணவர்கள் வாக்களிக்க முடியாது, எனவே அவர்களுக்கு உதவ யாரும் இல்லை. இந்தியா-கனடா உறவுகளில் ஏற்படும் அழுத்தத்தால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்."
 
கொனஸ்டோகா போன்ற சில கனடிய கல்லூரிகள், புதிய மாணவர்களுக்கு இடமளிக்க தங்கள் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துகின்றன.
 
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விரைவில் சீராகும் என தெற்காசிய இணைப்பின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷாஜியா நசீர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
தெற்காசிய இணைப்பு என்பது கிரேட்டர் டொராண்டோ பகுதியில் மாணவர்கள் குடியேற உதவும் ஓர் அமைப்பு.
 
ஷாஜியா பேசுகையில், ​​"செப்டம்பரில் புதிதாக வரும் மாணவர்களுக்கு விஷயங்களை எளிதாக்க வேண்டும். வரும் செப்டம்பரில் நிறைய மாணவர்கள் வருவார்கள்.
 
கனடா அமைதியான நாடு. எல்லாம் சுமூகமாக நடக்கும் என்று நம்புகிறோம். ஆனால் இனப் பாகுபாடு குறித்த கவலை உள்ளது," என்றார்.
 
ஜூபின் தாமஸ் போபாலை சேர்ந்தவர். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கனடா வந்துள்ளார். ஜூபின் 5 இந்திய மாணவர்களுடன் வசித்து வருகிறார்.
 
அவர் பேசுகையில், "இங்குள்ள சூழ்நிலை எங்களுக்கு மிகவும் பதட்டமாக உள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இனப் பாகுபாடு சம்பவங்கள் இன்னும் தொடங்கவில்லை."

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது பற்றி அமைச்சர் உதயநிதி டுவீட்