Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாழ்ப்பாணத்தில் தமன்னா, யோகி பாபு பங்கேற்ற நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் - ரசிகர்கள் ரகளை ஏன்?

யாழ்ப்பாணத்தில் தமன்னா, யோகி பாபு பங்கேற்ற நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் - ரசிகர்கள் ரகளை ஏன்?

Sinoj

, சனி, 10 பிப்ரவரி 2024 (21:35 IST)
இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய பிரபல பாடகர் ஹரிகரனின் மாபெரும் இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அமைதியின்மையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 
அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட, ஆள் அடையாளத்தை உறுதி செய்துக்கொள்ள முடியாத ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
 
இதைத் தவிர, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
 
பிரபல தென்னிந்திய நடிகையான ரம்பா, இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஐரோப்பாவில் வாழும் இந்திரன் குடும்பத்தினர், யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்ய தீர்மானித்துள்ளனர்.
 
இதன்படி, யாழ்ப்பாணத்தில் நோர்தன் யூனி என்ற பெயரில் பல்கலைக் கழகமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
 
இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்தை விளம்பரப்படுத்தும் நோக்குடன் ஹரிகரன் தலைமையிலான இசை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
 
இந்த நிகழ்ச்சியை தென்னிந்திய நடன கலைஞரான கலா மாஸ்டர் ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
 
நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் யோகி பாபு, சிவா, ரெடிங்டன் கிங்ஸ்லி , டிடி எனப்படும் திவ்யதர்ஷினி, புகழ், சுவேதா மோகன், ஸ்ரீநிஷா உள்ளிட்ட பல கலைஞர்கள் வருகை தந்திருந்தனர்.
 
யாழ்ப்பாணத்தில் வரலாறு காணாத வகையில் நடைபெறும் நிகழ்வாக இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட போதிலும், கடும் மழை காரணமாக நிகழ்வு பிப்ரவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
 
இந்த நிலையிலேயே, இந்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் நகரில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
பிரபல பாடகர் ஹரிகரன் தலைமையிலான பிரமாண்ட இசை நிகழ்ச்சி நேற்று மாலை ஆரம்பமாகியது.
 
இந்த நிகழ்ச்சி இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விசேட பிரமுகர்களுக்காக டிக்கெட்களும் விற்பனை செய்யப்பட்டன.
 
''இந்த இசை நிகழ்ச்சியில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்கள் மூலம் கிடைக்கும் பணம், கல்விக்காக ஒதுக்கப்படும்" என ரம்பாவின் கணவரும், முதலீட்டாளருமான இந்திரன், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்தார்.
 
பல கோடி ரூபாய் செலவில் இந்த நிகழ்வு மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இசை நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்த பின்னணியில், இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
 
விசேட பிரமுகர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டு, அதற்கு பின்புறத்தில் இலவசமாக நிகழ்ச்சியை பார்வையிட வருகைத் தந்தவர்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த தருணத்தில், இலவசமாக பார்வையிட வருகைத் தந்த இளைஞர்கள், விசேட பிரமுகர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி பாதுகாப்பு தடுப்பு வேலிகளை கடந்து வர ஆரம்பித்துள்ளனர்.
 
இதை கட்டுப்படுத்த போலீஸார் முயற்சித்த போதிலும், போலீஸாரால் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.
 
அத்துடன், வீடியோ பதிவுகளை மேற்கொள்வதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மேடைகளில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் ஏறியது,பாதுகாப்பற்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
 
குறித்த மேடையிலிருந்து கீழே இறங்குமாறு கோரிய போதிலும், ரசிகர்கள் அதனையும் பொருட்படுத்தவில்லை என போலீஸார் கூறுகின்றனர்.
 
இந்த நிலையில், அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட இளைஞர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர போலீஸ் அதிகாரிகள் முயற்சித்த பின்னணியில், அங்கு அமைதியின்மை மேலும் வலுப்பெற்றது.
 
நிகழ்ச்சியை நடாத்துவதற்காக வருகை தந்த கலா மாஸ்டர், டிடி, சிவா, ஹரிகரன் உள்ளிட்ட கலைஞர்கள், ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு கோரிய போதிலும், ரசிகர்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர்.
 
''உங்களை பார்ப்பதற்கு நாங்கள் ஆசையாக வந்திருக்கின்றோம். நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உங்கள் காலில் வீழ்ந்து நமஸ்காரம் பண்ணிக்கிறேன். எல்லாம் கொஞ்சம் அமைதியாக இருங்கள்." என நடன கலைஞர் கலா மாஸ்டர் மேடையில் அறிவித்த போதிலும், ரசிகர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.
 
நிகழ்ச்சியை அமைதியாக நடத்துவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்த போதிலும், ரசிகர்கள் அதற்கு செவிமடுக்காததை தொடர்ந்து, இசை நிகழ்ச்சி முழுமையாக நிறுத்தப்பட்டது.
 
சமூக வலைத்தள பதிவுகள்
இசை நிகழ்ச்சியில் அமைதியின்மை ஏற்பட்டு, இசை நிகழ்ச்சி இடை நடுவில் நிறுத்தப்பட்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது
 
''அறிவார்ந்த சமூகம் இன்று இப்படி ஆகிவிட்டதே என்று கவலையளிக்கின்றது" என இலங்கையின் பிரபல வானொலி ஒலிபரப்பாளர் ரஜீவ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
இதேவேளை, ''பொங்கும் தமிழர்... மங்கும் கலாசாரம்.... பேரினவாதிகள் எதையும் செய்ய தேவை இல்லை" என பிரபல சமூக செயற்பாட்டாளரும், அரசியல்வாதியுமான சந்திரகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் கலாசார சீர்கேட்டை நிறுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜா பிபிசி தமிழுக்கு குறிப்பிடுகின்றார்.
 
''என்ன நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சி நடந்ததோ தெரியாது. ஆனால், நாங்கள் இதை பொருளாதார ரீதியில் வாய்ப்பாக பயன்படுத்த தவறி விட்டோம். மற்றையது இவ்வளவு காலமும் போதைப்பொருள் கூடுகின்றது, பெண்கள் பிரச்னை, மதுபானம் கூடுகின்றது என்று எல்லோருக்கும் சந்தேகம் தான் இருந்தது. இப்போது அதனை உறுதிப்படுத்தி விட்டார்கள். போராட்டம் இடம்பெற்ற ஒரு இடத்திற்கு இழுக்காகும்.
 
தமிழர் பகுதிகளில் கலாசார சீர்கேடு அதிகரிப்பதாக கூறுவதை நிறுத்த வேண்டும். படம் பார்க்கின்றோம் தானே. அவ்வாறு என்றால், படம் போடக்கூடாது. திரையரங்கு மூடப்பட வேண்டும். படத்தில் வருகின்ற தமன்னா, நேரில் வந்தால் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள்?. யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒழுக்கம், பண்பாடு அவசியமானது. எங்களை பண்பாக நடத்திக் கொள்ளும் பண்பும் நடத்தையும் இவர்களிடம் இல்லை.
 
எங்களுக்கு எங்களுடைய சுய கட்டுப்பாடு அவசியமானது. இது சுயக் கட்டுப்பாடு இல்லாத சமூகமாக மாறியுள்ளது. மற்றவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு நாம் நம்மை சுய விமர்சனம் செய்து பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட பண்பை நாங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எதிர்காலத்தில் பாரிய பிரச்னையை தோற்றுவிக்கும். இப்படியான சமூகத்தை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் என்ன செய்ய போகின்றோம்." என சமூக செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
 
 
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒருங்கிணைப்பில் காணப்பட்ட தவறே இந்த பிரச்னை எழுவதற்கான பிரதான காரணமாக இருந்திருக்க கூடும் என்பதே தவிர, கலாசார சீர்கேடு என இதனை கூற முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் பாரதி ராஜநாயகம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
 
''கலாசார சீர்கேடு என சொல்ல முடியாது. நிகழ்ச்சி என்பது எல்லா இடங்களிலும் நடப்பது ஒன்று. இங்கு நடந்த நிகழ்ச்சியில் சரியான முறையில் ஒழுங்குப்படுத்துவதில் குறைபாடுகள் இருந்திருக்கின்றது. டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டவர்கள் நீண்ட இடைவெளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளனர். அதனால், அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தி காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம். அதனாலேயே தடைகளை உடைத்துக் கொண்டு முன்னோக்கி வந்திருக்கின்றார்கள் என நான் நினைக்கின்றேன்.
 
பிரபல நடிகர்கள், நடிகைகள் வருகின்றார்கள் என்பதனால், அவர்களை பார்வையிட அனைவருக்கும் ஆர்வம் இருந்திருக்கும். ஓரளவிற்கேனும், அவர்களை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். டிக்கெட்களை பெற்றுக்கொண்டவர்களுக்கும், இலவசமாக பார்வையிட வந்தவர்களும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகளை பார்வையிட முடியாது போனமை தொடர்பில் எழுந்த விரக்தியே இந்த பிரச்னைக்கு காரணம் என நினைக்கின்றேன். அதைதவிர, கலாசார சீர்கேடு என கூற முடியாது." என அவர் கூறுகின்றார்.
 
''நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது - கலைஞர்கள் திருப்தியாக நாடு திரும்பினார்கள்"
"நிகழ்சசி ஏற்பாட்டாளர்களின் குறை என இதனை கூற முடியாது. மக்களின் உணர்வின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும்" என ஹரிகரன் இசை நிகழ்ச்சிக்கான இ ஏற்பாட்டு குழுப் பணிப்பாளர் ஷியா உல் ஹசன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.
 
''அருமையான நிகழ்ச்சி. மக்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்டினார்கள். இப்படியான ஒரு நிகழ்ச்சி கொழும்பில் கூட நடாத்தப்படவில்லை. இவ்வளவு நட்சத்திரங்களையும் பார்த்ததன் பிறகு அவர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். நிகழ்ச்சி இடைநடுவில் நிறுத்தப்படவில்லை. முழுமையாக நடாத்தப்பட்டது. இடையில் மாத்திரம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. யாருக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அறிவிப்பொன்று மாத்திரம் விடுக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சியை முழுமையாக நடாத்தினோம்.
 
ஏற்பாட்டாளர்களின் குறை என்று சொல்ல முடியாது. எதிர்பார்க்க முடியாத கூட்டம் வந்தது. இவ்வளவு பெரிய ரசிகர்கள் ஒன்று கூடினால், எந்தவொரு ஏற்பாட்டாளராலும் கட்டுப்படுத்த முடியாது. ஏற்பாட்டாளர்களின் பிழை என்று சொல்வதற்கு எதுவும் நடக்கவில்லை. ரசிகர்கள் முன்னோக்கி நகர்ந்தார்கள். அவ்வளவு தான். அதுவொரு பெரிய பிரச்னை கிடையாது. அது மக்களின் உணர்வு வெளிப்பாடு. வெளிப்படுத்தி விதம் வித்தியாசமாக இருந்தது. அனைத்து கலைஞர்களும் திருப்தியாக நாடு திரும்பினார்கள். இந்தியாவில் கூட இவ்வளவு பெரிய ரசிகர்களை நாங்கள் பார்வையிடவில்லை என கலைஞர்கள் கூறினார்கள். மக்கள் இவ்வளவு அன்பு கொடுத்ததை தாங்கள் பார்த்ததில்லை என அவர்கள் கூறினீர்கள்" என இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுப் பணிப்பாளர் ஷியா உல் ஹசன் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியருக்கு ரூ.33 கோடி லாட்டரி பரிசு