Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு பிட்காயின் மதிப்பு ரூ.59 லட்சம் - யார் இந்த பிட்காயின் திமிங்கலங்கள்?

ஒரு பிட்காயின் மதிப்பு ரூ.59 லட்சம் - யார் இந்த பிட்காயின் திமிங்கலங்கள்?

Sinoj

, செவ்வாய், 12 மார்ச் 2024 (21:44 IST)
.
கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு, அதன் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் மதிப்பு 59 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களில் ஏற்பட்டிருக்கும் போக்கின் ஒரு பகுதியே இதுவாகும்.
 
பிட்காயின் மதிப்பு அதிகரித்தன் பின்னணியில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
அமெரிக்காவைச் சேர்ந்த கிரேஸ்கேல், பிளாக்ராக் மற்றும் ஃபிடிலிட்டி போன்ற முதலீட்டு நிறுவனங்கள், நிலையற்றது என்று வர்ணிக்கப்படும் இந்த டிஜிட்டல் கரன்சியை வாங்க பில்லியன்கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளன.
 
இந்த முதலீட்டின் காரணமாக, இந்த சக்திவாய்ந்த நிறுவனங்கள் 'பிட்காயின் திமிங்கலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
 
பிட்காயின் என்றால் என்ன?
பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். இந்த பணத்தை உலகின் பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்த முடியும்.
 
நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொடுத்தும் வாங்கலாம்.
 
தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
 
பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது.
 
பிட்காயின் முதலீடு
பிட்காயின் அமைப்பின்படி மொத்தமாக 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கமுடியும்.
 
அதில் இதுவரை 1.9 கோடி பிட்காயின்கள் மைனிங் செய்யப்பட்டு, அவை பரிமாற்றத்தில் உள்ளன.
 
‘பிட்காயின் மைனிங்’ என்பது உருவாக்கப்பட்ட பிட்காயினை கணினி உதவியுடன் புழக்கத்திற்கு கொண்டு வரப்படும் நடைமுறை ஆகும். உலகம் முழுவதும் இந்த பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
 
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், இந்த டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்துள்ளனர்.
 
மொத்தமுள்ள 2.1 கோடி பிட்காயின்களில், சில நிறுவனங்கள் அல்லது தனிநபர்களிடம் இந்த பிட்காயின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. அவ்வாறு அதிக பிட்காயின்களை வைத்து அதன்மூலம் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்களை ‘பிட்காயின் திமிங்கலங்கள்’ என்று முதலீட்டாளர்கள் வர்ணிக்கின்றனர்.
 
உலகம் முழுவதும், அதிக பிட்காயினை வைத்துள்ளவர்கள் விவரத்தை பிப்ரவரி 29 வரை எடுத்தபோது சில தகவல்கள் தெரியவந்தன. கீழேயுள்ள புள்ளிவிவரங்கள், நேரடி ஆராய்ச்சி மற்றும் பொது தளத்தில் கிடைக்கும் தகவல்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மதிப்பீடுகள் ஆகும்.
 
மொத்தமுள்ள பிட்காயின்களில் சில லட்சம் பிட்காயின் காணாமல் போய் விட்டதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். அச்சிடப்பட்ட பணத்தை தொலைப்பது போல பிட்காயின்களை தொலைக்க முடியுமா?
 
பிட்காயின்கள் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் இயங்கும் பணம் என்பதால் இதை பாதுகாக்க பல அடுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
 
பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிட்காயின் கரன்சி பரிமாற்றம் நடக்கிறது. இந்நிலையில் ஒரு பயனர், தனது பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும்(பாஸ்வேர்டு) மறந்தால் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை மீட்பது கடினம்.
 
பிட்காயின் பரிமாற்றத்தில், வாடிக்கையாளர் சேவை ஏதும் இல்லாத நிலையில், கணக்குகளை மறந்ததால் லட்சகணக்கான பிட்காயின்கள் உரிமை கோர ஆள இல்லாமல் நிரந்தரமாக காணாமல் போகின்றன.
 
முப்பது முதல் அறுபது லட்சம் பிட்காயின்கள் இப்படி காணாமல் போய் இருக்கலாம் என்கிறனர் வல்லுநர்கள். வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தூக்கி எறிந்த தனது ஹார்ட் டிஸ்கில் சேமிக்கப்பட்ட வாலட் கணக்கால் 8000 பிட்காயின்களை இழந்தார்.
 
குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிட்காயின் பரிமாற்றமும் நாளடைவில் காணாமல் போகின்றன என்று கிரிப்டோ-புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
எலிப்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த புலனாய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளான செயல்பாடில்லாத நிலையில் 31.5 லட்சம் பிட்காயின்கள் இருக்கின்றன. இவ்வாறு 5 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாடில்லாமல் இருக்கும் இந்த பிட்காயின்களால், நிரந்தரமாக காணாமல் போகும் பிட்காயின்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று செயின்லைஸிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த புலனாய்வாளார்கள் கூறுகின்றனர்.
 
காணாமல் போன பிட்காயின் குறித்து இப்படி பலரும் ஒரு மதிப்பீட்டை வழங்குகின்றனர். ஆனால் இதில் 11 லட்சம் பிட்காயின், அடையாளம் தெரியாத ஒரு நபருக்கு சொந்தமாக இருக்கலாம் என்றும், அவர் தான் பிட்காயினை உருவாக்கி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
 
அப்படியெனில் 24 லட்சம், அதாவது மொத்த பிட்காயினில் 11% பங்கு சந்தையில் இருந்து நிரந்தரமாக காணாமல் போய்விட்டதாக மதிப்பிடப்படுகிறது.
 
கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள், கிரிப்டோ-பயனர்களுக்கான வங்கிகளைப் போல செயல்படுகின்றன. இங்கு பிட்காயின் மற்றும் பிற டிஜிட்டல் கரன்சிக்கு பதிலாக டாலர், பவுண்டு, ரூபாய் போன்ற உங்களுக்கு விருப்பமான பணமாக மாற்றிக் கொள்ள முடியும்.
 
வாடிக்கையாளர்களின் சார்பாக சுமார் 23 லட்சம் பிட்காயின்கள் இப்படியான பரிமாற்ற மையங்களில் உள்ளதாக கே33 ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
 
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிமாற்ற நிறுவனங்கள்
 
 
‘பிட்காயின் திமிங்கலம்’ என்பது தங்கள் டிஜிட்டல் வாலட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பிட்காயின்களை வைத்திருக்கும் நபர்களை குறிக்க பயன்படுத்தும் சொல்லாடல்.
 
பிரபல வலைத்தளமான Bitinfocharts, உலகின் டாப் 100 பிட்காயின் பணக்காரர்களின் பட்டியலை பொதுவெளியில் இருக்கும் பரிமாற்ற தகவலின் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளது.
 
இந்த 100 பேர் பட்டியலில் 80 பேரின் அடையாளங்கள் யாருக்கும் தெரியவில்லை. அடையாளம் தெரியாத இந்த நபர்களின் வாலட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பிட்காயின்கள் உள்ளன.இப்படி அடையாளம் தெரியாத திமிலங்களின் பிட்காயின் கையிருப்பை கணக்கிட்டால், மொத்த பிட்காயின்களில் அவை 8% வரை உள்ளன.
 
இதுபோன்ற ஏதாவது ஒரு வாலட் உங்களுக்கு சொந்தமாக இருந்தால், இன்றைய சந்தை மதிப்பின்படி நீங்கள் பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரராக இருப்பீர்கள்.
 
பிட்காயின்கள் செயல்படும் விதத்தின் அடிப்படையில் அதன் எண்ணிக்கை அதிகபட்சமாக 2.1 கோடியாக மட்டுமே இருக்கமுடியும். உலகெங்கிலும் உள்ள தன்னார்வ கணினிகளின் வலையமைப்பை பயன்படுத்தி ஒவ்வொரு நாணயமும் உருவாக்கப்பட வேண்டும். இதையே கிரிப்டோ வழக்காடு மொழியில், மைனிங் செயல்பாடு என்கின்றனர். சுரங்கத்தில் இருந்து கனிமங்களை வெட்டியெடுப்பது போல, இந்த வலையமைப்பில் இருந்து ஒவ்வொரு பிட்காயினாக எடுக்க வேண்டும்.
 
இந்த பணியில் பல்வேறு நிறுவனங்கள், தங்களின் கணினிகளை பயன்படுத்தி வேலை செய்து வருகின்றன. அப்படி மைனிங் செய்யப்படும் பிட்காயின்கள் சந்தையில் புழக்கத்திற்கு வரும். இதுவரை மொத்தமுள்ள பிட்காயின்களின் 93% கரன்சி சந்தையில் புழக்கத்தில் உள்ளன.
 
மொத்தமாக உருவாக்கப்பட்ட 2.1 கோடி பிட்காயின்களில், வெறும் 7% பிட்காயின் மட்டுமே இன்னும் மைனிங் செய்யப்படாமல் உள்ளன. உலகின் கடைசி பிட்காயின் 2140ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
 
பிட்காயின்கள் 2009ஆம் ஆண்டு முதன்முதலாக உருவாக்கப்பட்டன. இதை உருவாக்கிய அடையாளம் தெரியாத நபரிடம் 11 லட்சம் பிட்காயின்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அந்த நபரிடமுள்ள இந்த கிரிப்டோ கரன்சி எதுவும் இத்தனை ஆண்டுகளில் எந்த பரிமாற்றத்திலும் பங்குகொள்ளவில்லை.
 
பிட்காயின்களை உருவாக்கிய அந்த அடையாளம் தெரியாத நபரின் பெயர் சத்தோசி நகமுட்டோ என்றும், அவர் ஜப்பானைச் சேர்ந்தவர் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இந்த பெயருடைய நபர் ஆணா, பெண்ணா அல்லது உயிருடன் இருக்கிறாரா, இறந்து விட்டாரா என்று எந்த தகவலும் தெரியாது.
 
அவரிடம் உள்ள 11 லட்சம் பிட்காயின்களின் இன்றைய மதிப்பின் அடிப்படையில், அடையாளம் தெரியாத இந்த நபர் உலகின் 22வது பணக்காரராக இருப்பார் என்று மதிப்பிடப்படுகிறது.
 
 
கடந்த ஜனவரி மாதத்தில், அமெரிக்க நிதித்துறை அதிகாரிகள் ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் மூலமாக பிட்காயின்களுடன் இணைக்கப்பட்ட, ஸ்பாட் பிட்காயின் பத்திரங்களை விற்க அனுமதி வழங்கினர்.
 
இதன் மூலமாக இந்த முதலீட்டு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான பிட்காயின்கள் வாங்கின. அதைக் கொண்டு வெளிச்சந்தையில் பிட்காயின் பத்திரங்களை விற்பனை செய்தன. இப்படியான பத்திரங்களை வாங்கிய எந்தவொரு நபரும், நிறுவனமும் பிட்காயின்களை சொந்தமாக வைத்திருக்கவில்லை.
 
பிப்ரவரி 29ஆம் தேதி இந்த முதலீட்டு பத்திரங்களை மூலமாக 9 லட்சத்து 33 ஆயிரம் நாணயங்கள் பத்திரங்களாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கே33 ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலமாக இந்த வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்த பிட்காயின் மதிப்பில் 4.5% கரன்சியை வைத்துள்ளனர்.
 
 
உலகெங்கிலும் உள்ள காவல் முகமைகள், தங்களது கைது நடவடிக்கையின் போது சட்டவிரோத செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட பிட்காயின்களை பறிமுதல் செய்கின்றன.
 
இப்படி பறிமுதல் செய்யப்படும் பிட்காயின் ஏலத்தில் விடப்படுகின்றன. சந்தை வல்லுநர்களின் தரவுகளின்படி, அமெரிக்க காவல்துறை தொடர்புடைய பறிமுதல் நடவடிக்கையின் மூலமாக 2 லட்சத்து 30 ஆயிரம் பிட்காயின்கள் பிடிபட்டுள்ளன.
 
இதேபோல 2018ல் நடந்த பறிமுதல் நடவடிக்கையின் மூலமாக இங்கிலாந்தில் 60 ஆயிரம் பிட்காயினும், அண்மையில் ஜெர்மனி காவல்துறை 50 ஆயிரம் பிட்காயினையும் பறிமுதல் செய்தனர்.
 
 
மென்பொருள் நிறுவன உரிமையாளரான மைக்கேல் சேலர், தனது நிறுவனம் மூலமாக பிட்காயின்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 2020ஆம் ஆண்டு முதல், மைக்ரோஸ்ட்ரடேஜி என்ற தனது நிறுவனம் மூலமாக பல்லாயிரக்கணக்கான பிட்காயின்களை இவர் வாங்கி வருகிறார்.
 
ஒவ்வொரு முறை பிட்காயினை வாங்கும் போதும் அதை தனது சமூக ஊடகத்தில் மைக்கேல் பதிவிட்டு கொண்டாடுவார். மைக்கேல் தனது நிறுவனங்களின் வழியாக இதுவரை 1,93,000 பிட்காயின்களை வாங்கியுள்ளார். இதன் மூலமாக உலகிலேயே அதிக பிட்காயின்களை வைத்து நிறுவனமாக இவரின் நிறுவனம் அறியப்படுகிறது.
 
உலகின் முதல் பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான மவுண்ட் காக்ஸ், 2011 ஆம் ஆண்டில் சுமார் 8,50,000 பிட்காயின்களை இழந்தது. இதைப் பற்றி தனது புத்தகத்தில் எழுதியுள்ள மார்க் ஹண்டர் கூறுகையில், “நாணயங்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு இன்னும் குழப்பம் உள்ளது. ஆனால் காணாமல் போன பிட்காயின்களில் பெரும்பாலானவை திருடர்களால் விற்கப்பட்டு சந்தையில் புழக்கத்தில் உள்ளன.” என்றார்.
 
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரின் அதிபருக்கு பிட்காயின் மீது அளவு கடந்த பிரியம் உண்டு. அதன் விளைவாக கடந்த 2021ஆம் ஆண்டு அந்நாட்டின் பொதுப் பணத்தை பயன்படுத்தி பிட்காயினை இவர் வாங்கத் தொடங்கினார். அதிபரின் இந்த செயலுக்கு கடுமையாக எதிர்ப்புகளும் கிளம்பின.
 
இந்த நாட்டுக்கு சொந்தமாக 2,800 பிட்காயின்கள் இருப்பதாக கிரிப்டோகரன்சி வலைதள பதிவாளரும், டச்சு ஆய்வாளருமான எலியாஸ் கணிக்கிறார். ஆனால் அதிகாரப்பூர்வமாக எல் சால்வடோர் நாட்டுக்கு சொந்தமாக எத்தனை பிட்காயின் உள்ளன என்ற விவரம் பொதுவெளியில் இல்லை.
 
2023ஆம் ஆண்டின் கடைசி காலாண்டு வருவாயை டெஸ்லா நிறுவனம் வெளியிடும் போது அதில் அந்நிறுவனத்திற்கு சொந்தமாக 9,700 பிட்காயின் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
 
2021ஆம் ஆண்டு, ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் 40,000 க்கும் மேற்பட்ட பிட்காயினை வாங்கியது. ஆனால் அண்மையில் அதில் பெரும்பாலானவற்றை அந்நிறுவனம் விற்றுவிட்டது.
 
1 கோடிக்கும் அதிகமான பிட்காயின்கள் பொதுமக்களிடம் உள்ளன என்று பால்பார்க் நிறுவனம் மதிப்பிடுகிறது.
 
இதில் எத்தனை தனிப்பட்ட நபர்கள் பிட்காயின்களை வைத்திருக்கிறார்கள் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது. ஆனால் கிரிப்டோ-டெக் நிறுவனமான ரிவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மதிப்பீட்டை வெளியிட்டது. அதன்படி 81.7 லட்சம் பிட்காயின் பயனாளர்கள் பரிமாற்றங்களில் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறது. அப்படியெனில் உலக மக்கள் தொகையில் 1% பேர் கிரிப்டோ பயனாளர்களாக இருக்கிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1.16 கோடி பெண்களும் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்- அமைச்சர் கீதா ஜீவன்