Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு பாட்டில் தண்ணீரின் விலை பல்லாயிரம் ரூபாயா? 'ஆடம்பர குடிநீர்' பற்றி தெரியுமா?

luxary water

Sinoj

, வெள்ளி, 19 ஜனவரி 2024 (21:07 IST)
ஒயின் மதுபானத்திற்கு பதிலாக 'ஆடம்பரமான தண்ணீரை' மெனுவில் வைத்துள்ள உணவகம் குறித்து நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா?
 
அல்லது மகிழ்ச்சிகரமான ஜோடிக்கு ஷாம்பைன் மதுபானம் அல்லது பழச்சாறுக்கு பதிலாக ‘ஆடம்பர H2O’ வழங்கப்பட்ட திருமணம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
 
இந்த தண்ணீர் வழக்கமான மினரல் அல்லது குழாய் நீரை விட தரம் வாய்ந்தது என்கின்றனர். இந்த ஒருபாட்டில் தண்ணீருக்காக நீங்கள் பல நூறு டாலர்களை (பல ஆயிரம் ரூபாய்கள்) செலவழிக்க வேண்டியிருக்கும்.
 
வைன் போன்றே இந்த தண்ணீரை ஸ்டீக் (இறைச்சி உணவு) முதல் மீன் உள்ளிட்ட உணவு வகைகளுடன் சேர்த்து அருந்தலாம்.
 
செலவுமிக்க இந்த ஆடம்பர தண்ணீர் எரிமலை பாறைகளிலிருந்தும் பனிப்பாறைகளிலிருந்து ஐஸ் கட்டிகளை உருக்கியும் மூடுபனியிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. மேகங்களிலிருந்து நேரடியாகவும் இந்த தண்ணீரை பிரித்தெடுக்க முடியும்.
 
இந்த தண்ணீர் எதிலிருந்து வருகிறது என்பதைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடும். வழக்கமான தண்ணீரை போன்றல்லாமல் இது சுத்திகரிப்பு செய்யப்படாதது ஆகும்.
 
உலகம் முழுவதும் இதற்கென பல பிராண்டுகள் உள்ளன. இதுகுறித்து உங்களுக்கு அறிவுரை கூறுவதற்கென நிபுணர்களும் உள்ளனர்.
 
குழந்தைகளுக்கு தண்ணீரை சுவைத்துப் பார்ப்பதற்கென அமர்வுகளை நடத்தி வருகிறார் மிலின் படேல்.
 
எப்படி ஒயினைச் சுவைத்து பரிமாறுவதற்கென பணியாளர்கள் உள்ளனரோ அதேபோன்று இந்த தண்ணீரில் என்னென்ன தாதுக்கள் உள்ளன, அதன் சுவை எப்படி இருக்கும், அதன் சுவை நமது நாக்கில் எப்படி தனித்துத் தெரியும் என்பதையெல்லாம் பார்த்து சொல்வதற்கு பணியாளர்கள் இருப்பார்கள்.
 
”தண்ணீர் என்பது வெறும் தண்ணீர் அல்ல. உலகிலுள்ள ஒவ்வொரு தண்ணீரும் வித்தியாசமானது மற்றும் சுவை கொண்டது,” என தண்ணீர் ஆலோசகரும் லண்டனில் தற்காலிக சந்தை (pop-up store) நடத்தி வருபவருமான மிலின் படேல்.
 
குழாய் மற்றும் பாட்டில் தண்ணீர் உட்பட இத்தகைய தண்ணீர் வகைகளை அனுபவிக்க ஆசைப்படுபவர்களுக்கு அவற்றைச் சுவைப்பதற்காக பல அமர்வுகளையும் அவர் நடத்திவருகிறார்.
 
பலவித தண்ணீர் வகைகள் மற்றும் அவற்றின் சுவைகள் குறித்து மக்களுக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு, கற்றுக்கொடுக்கும் பணியை செய்துவருவதாக மிலின் படேல் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"பள்ளியில் நாம் ஆவியாதல், உறைதல், மழைப்பொழிவு என, இயற்கையான நீரியல் சுழற்சி முறைகள் குறித்து கற்றது நினைவிருக்கும். ஆனால், நாம் ஒன்றை தவிர்த்து விட்டோம். அதுதான் மறு கனிமமயமாக்கல்,” என்கிறார் அவர்.
 
“மழைநீர் மண்ணில் விழும்போது அந்நீர் நிலத்தில் வெவ்வேறு பாறைகள் மற்றும் மண்ணில் ஊடுருவி கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சிலிக்கா உள்ளிட்ட தாதுக்களை பெறும். இந்த செயல்முறைதான் தண்ணீருக்கு தாதுக்களின் சுவையை வழங்குகிறது,” என படேல் கூறுகிறார்.
 
சோழர்களைப் போல செயற்கை ஏரிகள் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் வெள்ளத்தை சமாளிக்க உதவுமா?
2 ஜனவரி 2024
எண்ணூர் கடலில் 10 மடங்கு, காற்றில் 5 மடங்கு அமோனியா அதிகம் - முற்றிலும் அகற்ற முடியுமா?
27 டிசம்பர் 2023
தண்ணீர்
படக்குறிப்பு,
இந்த வகை தண்ணீரில் சில ஹவாயில் உள்ள எரிமலை பாறைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன; நார்வேயில் உருகும் பனிப்பாறைகளிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. டஸ்மானியாவின் காலை மூடுபனியின் துளிகளிலிருந்தும் எடுக்கப்படுகின்றன.
 
பனிப்பாறைகள் அல்லது மழை ஆதாரங்களிலிருந்து பெறப்படும் தண்ணீர், நிலத்தில் இயற்கையாக ஊடுருவாது என்பதால் இவை, நீரூற்றுகள் மற்றும் கிணறுகளிலிருந்து பெறப்படும் தண்ணீரை விட குறைவாகவே மொத்த கரைந்த திடப்பொருட்களை (TDS - Total dissolved solids) கொண்டிருக்கும்.
 
உலகம் முழுவதிலுமிருந்து குழாய் தண்ணீர் முதல் ஒரு பாட்டிலுக்கு 318 டாலர்களுக்கு விற்கப்படும் ஆடம்பர தண்ணீர் வரை பலவித தண்ணீர் வகைகளை படேல் சேகரித்து வைத்துள்ளார். அவர் நடத்தும் அமர்வுகளில் மக்கள் அதனை சுவைத்த பின்னர், ஒவ்வொரு தண்ணீரின் சுவையும் எப்படி தனித்துவமானது என கூறுவர்.
 
"தண்ணீர் சுவையற்றது என்பதைத் தாண்டிப் பார்க்கும் வாய்ப்பை நாங்கள் மக்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் அதனை மனதுக்கு நெருக்கமாக அனுபவித்து அருந்தும்போது அதன் சுவையை வர்ணிக்க உருவாகும் புதிய சொற்களைக் கண்டு ஆச்சர்யப்படுவீர்கள்," என படேல் விவரிக்கிறார். "மென்மையானது, க்ரீமி, கூசுவது போன்ற உணர்வு, வெல்வெட் போன்றது, கசப்பு, புளிப்பு சுவையுடவை என பல அழகான சொல்லாடல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. இதனை நான் அக்வாடேஸ்டாலஜி என்பேன்," என படேல் கூறுகிறார்.
 
"பெரும்பாலானோர், ‘இது என்னுடைய இளமைக்காலத்தை நினைவுபடுத்துகிறது', 'என்னுடைய விடுமுறை நாட்களை நினைவுபடுத்துகிறது', 'என்னுடைய தாத்தா, பாட்டி வீட்டை நினைவுபடுத்துகிறது' எனக்கூறுவார்கள்," என்கிறார் அவர்.
 
தண்ணீரை சுவைக்கும் போட்டிகள்
'தி ஃபைன் வாட்டர் சொசைட்டி' ஒவ்வோர் ஆண்டும் பூடான் முதல் ஈக்வடார் வரை, உலகம் முழுவதிலுமிருந்து இத்தகைய தண்ணீர் உற்பத்தியாளர்களை வரவழைத்து சர்வதேச அளவில் தண்ணீரை சுவைக்கும் போட்டிகளை நடத்துகின்றது.
 
தொலைதூர பகுதிகளிலிருந்து தண்ணீர் உற்பத்தி செய்யும் குடும்ப தொழில்களை நடத்துபவர்களே இதில் அதிகம் கலந்துகொள்கின்றனர்.
 
நடராஜர் கோவிலில் கீழிருந்து மேலே பாயும் நீர் - இந்த சோழர் நீர் மேலாண்மை நுட்பமே சிதம்பர ரகசியமா?
26 டிசம்பர் 2023
ஒரே நாளில் 93 செ.மீ. மழை பொழிந்த காயல்பட்டினம் தற்போது எப்படி இருக்கிறது?
24 டிசம்பர் 2023
தண்ணீர் 
படக்குறிப்பு,
2018-ஆம் ஆண்டில் ஈக்வடாரில் சர்வதேச அளவில் தண்ணீர் சுவைக்கும் போட்டியை ஃபைன் வாட்டர்ஸ் நடத்தியது.
 
"இந்த போட்டிகள் ஆரம்பத்தில் மிக அபத்தமானதாக கருதப்பட்டது," என்கிறார் ஃபைன் வாட்டர் சொசைட்டி மற்றும் ஃபைன் வாட்டர் அகாடமியின் இணை நிறுவனர் டாக்டர் மைக்கேல் மஸ்சா.
 
"20 ஆண்டுகளுக்கு முன்பு நான் மது அருந்துவதை நிறுத்தியபோது இந்த செயல்பாடுகளைத் தொடங்கினேன்," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"ஒயின் என்னுடைய உணவு மேசையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் நான் அதனை சுற்றியும் பார்த்தேன். அப்போது நான் முன்பு பார்த்திராத வேறொரு பாட்டில் இருந்தது, அதுதான் தண்ணீர். ஒயினுக்கு பதிலாக தண்ணீரைச் சுவைக்கலாம் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது," எனவும் அவர் கூறுகிறார்.
 
இத்தகைய தண்ணீர் தாகத்தைத் தீர்ப்பதுடன் பலவற்றை வழங்குவதாக அவர் நம்புகிறார். தனித்துவமான ஒன்றை ஆராயவும் பகிரவும் மகிழ்வதற்கான வாய்ப்பை அவை வழங்குவதாகவும் ஒயின்-ஐ போன்றல்லாமல் இதனை நம் குழந்தைகளுடனும் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
 
இந்த தண்ணீருக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், ஆரோக்கியமான வாழ்வியலுக்காக மதுபானங்கள் மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களை குறைவாக நுகரும் போக்கு குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே வளர்ந்துவரும் போக்கினால் இது நிகழ்வதாக அவர் கூறுகிறார்.
 
இந்த அரிதான, சுத்திகரிக்கப்படாத தண்ணீர், ’வின்டேஜ் ஒயின்’-ஐ போன்று ஓர் பின்னணி கதையுடன் சந்தைப்படுத்த முடியும் என்பதும் இதனை நோக்கி ஈர்க்கப்படுவதற்குக் காரணமாக உள்ளது.
 
வெள்ளத்தில் தவித்த 800 பயணிகளுக்கு உணவளித்த புதுக்குடி கிராமம் இப்போது எப்படி இருக்கிறது? - காணொளி
21 டிசம்பர் 2023
தென் மாவட்டங்களை புரட்டிப் போட்ட அதி கனமழை - புகைப்படத் தொகுப்பு
18 டிசம்பர் 2023
தண்ணீரும் உணவும்
தண்ணீர்
படக்குறிப்பு,
வைன்-ஐ போன்று இவ்வகை தண்ணீரை உணவுடனும் சேர்த்து அருந்த முடியும்.
 
ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் உள்ள சில உணவகங்கள் இத்தகைய ஆடம்பரமான தண்ணீரை தங்கள் மெனுவில் மற்ற உணவுகளுடன் சேர்த்துள்ளன.
 
"நான் இப்போது அமெரிக்காவில் உள்ள மூன்று நட்சத்திர மிஷலின் உணவகத்திற்கு இந்த தண்ணீர் மெனுவை தயாரித்து வருகிறேன். உணவு மற்றும் சூழலுக்குத் தகுந்தவாறு கவனமாக தொகுக்கப்பட்ட 12 முதல் 15 தண்ணீர் வகைகளை மெனுவில் சேர்க்க நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்," என டாக்டர் மஸ்சா கூறுகிறார்.
 
"நீங்கள் மீன் சாப்பிடும் போது, மாட்டுக்கறியுடன் வழங்கப்படுவது போன்றல்லாமல் வேறுவிதமான தண்ணீர் வழங்கப்படும். மீனுடன் (சுவையுடன்) குறுக்கிடுவதைத் தவிர்க்கும் வகையில், குறைந்த கனிமத்தன்மையுடனான நீர் தான் அதற்கு தேவை," என்கிறார் அவர்.
 
மேலும், ஒயின் அறைகளுக்கு பதிலாக தண்ணீரை அருந்தும் அறைகளுடன் கூடிய மிக ஆடம்பரமான வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களிலும் மஸ்சா பணியாற்றி வருகிறார்.
 
மத காரணங்களுக்காக மதுபானங்களை தவிர்க்கும் கலாசாரங்களிலும் இவ்வகை தண்ணீர் பிரபலமாகிவருவதாக குறிப்பிடும் மஸ்சா, திருமணங்களில் இவை பிரபலமடைந்து வருவதாக கூறுகிறார். செலவுகரமான ஷாம்பைனுக்கு பதிலாக சிறந்த மாற்று பரிசாகவும் இது இருக்கும் என்கிறார் அவர்.
 
இந்த போக்குக்கு விமர்சனங்களும் உள்ளன.
 
தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் - தற்போதைய நிலைமை என்ன?
18 டிசம்பர் 2023
2015 - 2023 மழை ஓர் ஒப்பீடு - சென்னையில் எந்த ஆண்டு அதிக மழை பெய்தது தெரியுமா?
17 டிசம்பர் 2023
'தார்மீக ரீதியாக தவறானது'
தண்ணீர்
படக்குறிப்பு,
ஐ.நா. அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் 220 கோடி பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் உள்ளனர்.
 
உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்க போராடிக்கொண்டு வரும் வேளையில், அடிப்படையான ஒன்றுக்கு இவ்வளவு பணம் செலவு செய்யும் இந்த யோசனை ஆபத்தானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
 
ஐ.நா. அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் 220 கோடி பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் உள்ளனர். அவர்களுள் 70.3 கோடி பேர் அடிப்படை தண்ணீர் விநியோகம் கூட இல்லாமல் உள்ளனர்.
 
இது ஏமாற்றுகர போக்கு என மற்ற விமர்சகர்கள் வாதிடுகின்றனர். தண்ணீர் என்பது வெறும் தண்ணீர் தான் என்றும் விலையை தவிர குடிக்கத்தகுந்த குழாய் நீர், பாட்டில் தண்ணீர் அல்லது 'ஃபைன் வாட்டர்' என்ற வித்தியாசமெல்லாம் இல்லை என்கின்றனர். எந்தவித பாட்டில் தண்ணீராக இருந்தாலும் அவை குப்பைகளாக மாறுவதால் அது நம் பூமிக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
கோடிக்கணக்கான பேர் சுத்தமான தண்ணீர் கிடைக்கப் போராடும் நிலையில், ஒரு பாட்டில் தண்ணீருக்கு பல நூறு டாலர்கள் செலவழிப்பது தார்மீகமற்ற செயல் என, லண்டனில் உள்ள கிரெஷாம் கல்லூரியில் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் கரோலின் ராபர்ட்ஸ்.
 
"நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து இரவு உணவுக்கு செல்லும்போது உங்களின் செல்வசெழிப்பை காட்டுவது போன்றதுதான் இது. 'அண்டார்டிகா அல்லது ஹவாயிலிருந்து எங்கிருந்தோ பறந்து வந்த இந்த அழகான பாட்டில் தண்ணீருக்கு நான் செலவு செய்கிறேன்' என்று கூறுவதை மக்கள் சிறந்ததாக நினைக்கின்றனர். ஆனால், யதார்த்தத்தில் இதில் யாருக்கும் பலன் இல்லை. இது முழுக்க பணம் சார்ந்தது மட்டுமே," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"மேலும், முக்கியமாக இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். மைக்ரோபிளாஸ்டிக்காக சிதைவடையும் பிளாஸ்டிக், உற்பத்திக்கு புதைபடிவ எரிபொருட்களின் தேவை அல்லது தண்ணீர் அடைக்கப்படும் மிக கடினமான கண்ணாடி, தொலைதூரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்குக் கொண்டு செல்லப்படுதல் என, இவ்வகை தண்ணீர் கார்பன் உமிழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்கிறார் அவர்.
 
"எனவே இது பணத்தைச் சார்ந்தது மட்டுமல்ல. இவ்வகை தண்ணீர் சுற்றுச்சூழலில் ஏற்படும் சேதங்களையும் கவனிக்க வேண்டும்," என்கிறார் அவர்.
 
நலாதுர்க்: ஆறு, அணை, அரண்மனை, நீர்வீழ்ச்சிகள் கொண்ட பிரமாண்ட கோட்டை
16 டிசம்பர் 2023
வெள்ளத்துக்கு பின் ஏற்படும் நோய்கள்: அறிகுறிகள் என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி?
11 டிசம்பர் 2023
தண்ணீர்
படக்குறிப்பு,
ஒவ்வொரு நாளும் பிளாஸ்டிக் நிரப்பப்பட்ட 2,000 குப்பை லாரிகளுக்கு சமமான குப்பைகள் உலகின் பெருங்கடல்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் கொட்டப்படுகின்றன என்று ஐ.நா. கூறுகிறது
 
ஆனால், இவ்வகை தண்ணீர் பணக்காரர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படுவது அல்ல என்றும் வெறும் இரண்டு டாலர்களுக்கும் இத்தகைய தண்ணீர் கிடைப்பதாக டாக்டர் மஸ்சா கூறுகிறார். இயற்கையான இத்தகைய தண்ணீருக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டும் அவர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார்.
 
"குழாய் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைப்பது எந்த அர்த்தத்தையும் கொடுப்பதில்லை. நீங்கள் பல்பொருள் அங்காடிக்கு உங்களின் எஸ்.யூ.வி காரில் சென்றுவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை வீட்டுக்குக் கொண்டு வந்து அருந்திவிட்டு அதனை தூக்கியெறிந்து விடுவீர்கள். நம்ப முடியாத வகையில் அது வீண் தான்," என்கிறார் அவர்.
 
சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் நீரைவிட, குழாய் நீரை தாகத்தைத் தீர்க்க பயன்படுத்தலாம் என அவர் பரிந்துரைக்கிறார்.
 
"உண்மையிலேயே குடிநீர் குழாய் கொண்டிருப்பது, உலகெங்கிலும் உள்ள பலருக்குக் கிடைக்காத ஒரு பாக்கியம் தான் என்பதை நாம் மறந்து விடுகிறோம்," என அவர் முடித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் பந்தன் வங்கி திறப்பு விழா