Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பைரவர் சாமியின் முக்கியத்துவம் என்ன?

பைரவர் சாமியின் முக்கியத்துவம் என்ன?
, திங்கள், 8 ஆகஸ்ட் 2011 (20:52 IST)
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பைரவரை சிவனுடைய ஒரு அம்சமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக பைவரர் எல்லைத் தெய்வமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது காவல் தெய்வமாக. மூகாம்பிகை கோயில்களுக்குப் போனால் வீரபத்ரசாமிகள் வலப்பக்கத்தில் இருப்பார். அவர் ஒரு எல்லைத் தெய்வம். அம்பாளை வணங்கிவிட்டு வரும்போது காவல் தெய்வமான வீரபத்ரசாமியை வணங்குவார்கள். அதேபோல, பழமையான சிவலாயங்களிலெல்லாம் நோக்கினால் பைரவர் இருப்பார். நாய் வாகனத்துடன் நின்ற கோலம், வதுவான கோலத்தில்தான் இருப்பார். இது என்னவென்றால், காவலாக இருப்பேன் என்பதைச் சொல்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு சென்றால் பைரவர் அமர்ந்த கோலத்தில் தவக்கோலத்தில் இருப்பார். எல்லா இடங்களிலும் இருப்பவர் வேறு, இங்கு இருக்கும் பைரவர் வேறு. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவரை சூரியனுடைய அம்சமாகவும் சொல்வார்கள். அவரிடம் சென்று உட்கார்ந்து சூரிய காயத்ரி சொன்னால் உங்களுடைய உடல் சூடு அதிகரிப்பதைப் பார்க்கலாம். காய்ச்சல் வந்தது போல் 102, 103 டிகிரியில் இருக்கும். வேண்டுமானால் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம். இங்குதான் அமர்ந்த கோலத்தில், தியானக் கோலத்தில் இருப்பார். அதன்பிறகு, அந்தப் பகுதிகளில் நிறைய பைவரர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன் பைரவர் வழிப்பாட்டில் தீவிரமாக இருந்திருக்கிறார்.

தவிர, சொர்னாதர்ஷன பைவரர் என்று பைரவர் இருக்கிறார். கையில் கலசத்துடன், துணையுடன் - அம்பாளுடன் - இருப்பார். ரஜினிகாந்த் கூட இங்கு இருக்கும் சொர்னாதர்ஷன பைரவரைச் சென்று வணங்கியிருக்கிறார். திருப்புலிவனம் என்ற ஊர் காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில் இருக்கிறது. இங்கு தட்சணாமூர்த்தி சிங்க வாகனத்திலும், புலி வாகனத்திலும் இருப்பார். இங்குதான் சொர்னாதர்ஷன பைரவரும் இருக்கிறார். வைணவத்தில் லட்சுமியையும், பெருமாளையும் வணங்கினால் பணம், காசு வரும் என்று சொல்வது போல, சைவத்தில் சொர்னாதர்ஷன பைரவர்தான் தன சாஸ்திரத்திற்கு உரியவர். அதனால்தான் சொர்னாதர்ஷன பைரவரை வணங்குவார்கள்.

செட்டி நாட்டுக்காரர்கள் பொதுவாக பைரவர் வழிபாடு அதிகமாகச் செய்வார்கள். காத்து, கருப்பு அண்டாமல் இருப்பது. போட்டி பொறாமை, வயிற்றெறிச்சலால் வரக்கூடியதை கழிக்கக்கூடியதும் பைரவருக்கு உண்டு. அந்தக் காலத்தில் வழித்துணைக்கு பைரவரை வணங்கிவிட்டுத்தான் எல்லோரும் கிளம்புவார்கள். ஏனென்றால், அப்பொழுதெல்லாம் மாட்டு வண்டிப் பயணம், நள்ளிரவுப் பயணமெல்லாம் அதிகம் இருக்கும். அதற்காக அதுபோலச் செய்வார்கள். தேங்காயை உடைத்து கண் இருக்கும் முடியை எடுத்து அதில் ஐந்து விதமான எண்ணெய்களை விட்டு அதில் திரிபோட்டு விளக்கேற்றுவார்கள். இதுபோல பைரவருக்குச் செய்யும் போது, ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய தோஷம் எல்லாம் விலகும் என்று சொல்வார்கள். ஆகமொத்தத்தில் பைரவர் என்பவர் விசேஷமானவர்.

இதுதவிர, ஜுர பைரவர் என்றெல்லாம் இருக்கிறார். ஜுரம் வந்தால் அவரை வணங்கிவிட்டு வந்தால் ஜுரம் போய்விடும். நிறைய பாடல் பெற்ற தலங்களில், பண்ருட்டி பக்கத்தில் திருவதிகை என்று ஒரு ஊர் இருக்கிறது. வீரதானேஸ்வரம் அது. அங்கு ஒரு பைரவர் இருக்கிறார். இப்படி ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பைரவர் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. இதுபோல பைரவரை வணங்கும் போது நோய் விலகும், எதிர்மறை எண்ணங்கள் விலகும்.

ஒரு பையனும் அம்மாவும் வந்திருந்தார்கள். சோழி போட்டுப் பார்த்தேன். அதில் 8 வந்தது. 8 வந்தால் மரண பயத்தை தரக்கூடிய எண் என்று அர்த்தம். திசையும் சனி திசை. சனி ஆயுளுக்கு உரிய கிரகம். சனி 2ல் இருக்கிறார். அந்த திசை நடந்து கொண்டிருக்கிறது. பையன் (Electrical and Electronics Engineering - EEE) 4வது வருடம் படித்துக் கொண்டிருக்கிறார். பையனைப் பார்த்தாலும் நன்றாகத்தான் இருக்கிறார். அவர்களிடம் சொன்னேன், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், எதிர்மறை எண்ணங்கள் தோன்றும், ஆயுள் பயமெல்லாம் கொடுக்கும் என்று சொல்லி முடித்ததும், அந்தப் பையன் சொல்கிறான், எப்பொழுது பார்த்தாலும் நான் இறந்துவிடுவேனோ என்ற பயம் இருக்கிறது என்று சொன்னார்.

இதுபோல, சனியால், ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளுக்கு பைரவர் வழிபாடு தைரியத்தையும், எதிர்மறை எண்ணங்களை முழுமையாக வேரறுக்கக்கூடியவர் பைரவர். அதனால் பைரவரை வணங்கும் போது எல்லா வகையான சக்தியும் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil