Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கலை, அதுக்குள்ள பொறுப்பாளர் நீக்கமா?

ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கலை, அதுக்குள்ள பொறுப்பாளர் நீக்கமா?
, வியாழன், 22 மார்ச் 2018 (20:16 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரசிகர்களுக்கு வீடியோ வடிவில் அளித்த செய்தியில் பதவி கிடைக்காதவர்கள் மற்றவர் மீது பொறாமை படக்கூடாது என்றும் கடவுள் நமக்கு கொடுத்த இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில்  திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் தம்புராஜ் என்பவர் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: ‘’திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ், ரஜினி மக்கள் மன்ற ஒற்றுமைக்கும் ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் முரணாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அவரை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாகத் தகுதி நீக்கம் செய்து, அவருடைய செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் நன்கு கண்காணித்து, அவருடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், அவருடைய பதவி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அவருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மற்ற எந்தவிதத்திலோ தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.ஆர்.அரவிந்த், மாவட்டச் செயலாளர் பணிகளையும் தற்காலிகமாக கூடுதலாகக் கவனிப்பார் என்பதை தெரிவித்துக்கொண்டு, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும், அவருடன் ஒன்றுபட்டு செயல்படவும் ஒத்துழைக்கவும் அன்புத்தலைவர் ஒப்புதலின்படி அறிவுறுத்துகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்காத நிலையில் அதற்குள் பதவிப்போட்டியால் ஒருவர் பதவியிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஜிபி அலுவகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இரு காவலர்கள் கைது...