Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெரினாவில் இடம் மறுப்பு ; எடப்பாடி போட்ட கணக்கு : நடந்தது என்ன?

மெரினாவில் இடம் மறுப்பு ; எடப்பாடி போட்ட கணக்கு : நடந்தது என்ன?
, வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (11:04 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடுக்க மறுத்ததன் மூலம்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல காரியங்களை சாதித்துவிட்டார் என அவருக்கு நெருக்கமான அதிமுக அமைச்சர்கள் புழங்காகிதம் அடைந்து வருகின்றனர்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவு செய்தி வெளியானதும் அவரை அண்ணா சமாதியின் அருகிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என திமுகவினர் சிலர் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவரிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை. எனவே, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் அவரை நேரில் சந்தித்து இதுபற்றி பேசினார். 
 
ஆனால், சட்டசிக்கல் இருப்பதாக கூறிய அவர் பார்ப்போம் என்று மட்டும் கூறி அனுப்பி வைத்துள்ளார். இடத்தை கொடுத்து விடுவோம் என ஓ.பி.எஸ், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம் உள்ளிட்ட பலர் கூறியும் எடப்பாடி கேட்கவில்லை. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலரை உடனடியாக அழைத்து ஆலோசனை செய்த எடப்பாடி, தலைமை செயலாளர் பெயரிலேயே ஒரு அறிக்கை வெளியிட கூறியுள்ளார். 
 
அதன்படி, சட்டசிக்கல் இருப்பதால் மெரினாவில் இடம் தர முடியாது, காமராஜர் நினைவிடம் அருகே இடம் கொடுக்கிறோம் எனக் கூறினார். இதையடுத்து, இரவோடு இரவாக நீதிமன்றத்தை நாடிய திமுக, அதில் வெற்றியும் பெற்றதால் மெரினாவிலேயே கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
webdunia

 
இங்குதான் எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கியத்தனம் அடங்கியிருப்பதாய் கூறுகிறார்கள். அதாவது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மணிமண்டபத்தை கட்ட எடப்பாடி திட்டமிட்டிருந்தார். ஆனால், மெரினா கடற்கரையில் புதிய கட்டிடங்களை எழுப்பக்கூடாது என வழக்கறிஞர் துரைசாமி, பா.ம.க பாலு, டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட 5 பேர் தொடர்ந்த வழக்கு காரணமாக ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் சிக்கல் நீடித்து வந்தது. 
 
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தொடர்பான இந்த வழக்கின்போது, 4 பேர் வழக்குகளை வாபஸ் பெற்றனர். டிராபிக் ராமசாமியின் வழக்கறிஞர் மாறி மாறி பேசியதால் கோபமடைந்த நீதிபதி அவரின் மனுவையும் சேர்த்து 5 மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டு, திமுகவிற்கு சாதகமான உத்தரவை பிறப்பித்தார்.
 
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் என்றவுடன், டெல்லி, தமிழக பாஜக அதிகார மட்டத்திலிருந்து இதை அனுமதிக்கக் கூடாது என எடப்பாடிக்கு உத்தரவு போனதாம். அதோடு, இதை அனுமதித்தால் அதிமுகவினரின் எதிர்ப்புகளை எடப்பாடி சம்பாதிப்பார் என டிடிவி தினகரன் தரப்பு கணக்கு போட்டதையும் மோப்பம் பிடித்தார் எடப்பாடி.
webdunia

 
ஆனால், நீதிமன்றம் மூலமாக திமுக தரப்பு வெற்றி பெற்றுவிட்டதால் டிடிவி மற்றும் பாஜக தரப்பு வாயடைத்து விட்டதாக தெரிகிறது. இதனால், எதிர்ப்புகளிலிருந்து எடப்பாடி தப்பித்துவிட்டர். இது ஒருபுறம் இருக்க, ஜெ.வின் நினைவிடத்தை கட்ட இனிமேல் சிக்கல் இருக்காது என எடப்பாடி கணக்குப் போடுகிறாராம். 
 
ஆனால், இதில் சிக்கல் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். அதாவது, கருணாநிதிக்கு திமுக கேட்ட இடம் கூவம் ஆற்றங்கரையில் வரும் பகுதி. அதாவது மாநகராட்சிக்கு சொந்தமானது. அங்கே இறந்தவர்களின் உடலை புதைக்க பல வருடங்களுக்கு முன்பே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதி கடற்கரை மண்டலப்பகுதியில் அமைந்துள்ளது. இது மத்திய சுற்றுலாத்துறையின் கீழ் வருகிறது. இந்த கருத்தைத்தான் நீதிமன்றத்தில் வைத்து திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே, இதற்கும் ஜெ.விற்கு நினைவிடம் எழுப்புவதற்கும் தொடர்பு இல்லை என அவர்கள் கூறிகிறார்கள்.
 
அதுபோக, டிராபிக் ராமசாமி தனது வழக்கை இன்னும் வாபஸ் வாங்கவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதோடு, இன்னும் சிலர் வழக்கு தொடரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, ஜெ.விற்கு நினைவிடம் அமைக்க சிக்கல் வரும் என்பது அவர்களின் கருத்து. 

எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கியத்தனம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி இறுதி அஞ்சலி - கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த முக்கிய தலைவர்கள்