குழந்தைகளா இனி ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை சொல்லி அதற்கான பொருளையும் உங்களுக்கு அளிக்கிறோம். அதோடு திருக்குறளின் சிறப்பையும் தெரிந்து கொள்வீர்கள்.
திருக்குறளின் சிறப்பு
திருக்குறள் முழுவதும் குறள் வெண்பாவைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளது. குறள் வெண்பா என்பது ஒவ்வொரு பாடலும் இரண்டு அடிகளைக் கொண்டிருக்க வேண்டும். அதன்படி திருக்குறள் முழுவதும் இரண்டு அடிகளையும், முதல் அடி 4 வார்த்தைகளையும், இரண்டாம் அடி 3 வார்த்தைகளையும் கொண்டதாக அமைந்துள்ளது. குறள் வெண்பாவால் ஆன முதல் நூலும், ஒரே நூலும் இதுதான்.
திருக்குறளை இயற்றியது திருவள்ளுவர்.
கடவுள் வாழ்த்து
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
ஒருவர் தனது அகத்தின் வழியாக, மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவராக இருந்தால், அவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வர்.